Lord Skanda-Murugan

தைப்பூசம்: சங்கத் தமிழில் காவடி?

(ஆய்வுக் கட்டுரை: மாதவிப் பந்தல் கே.ஆர்.எஸ்)


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்!

சங்கத் தமிழில் காவடி!

என்னாது, சங்கத் தமிழிலே, அதியமானை எதிர்த்து, ஒளவை காவடி தூக்கினாளா? பார்ப்போமா?:)

அவன், அன்னையிடம், வேல் வாங்கிய நாள் = தைப்பூசம் என்று புராணங்கள் சொல்லும்.

ஆனால், அதனினும் இனிதாய்.....

மென்மையே உருவான நம் வள்ளலார், இறைவனைச் சோதி உருவில் துதித்த நாள் = தைப்பூசம்!

அருட்பெரும் சோதி... தனிப்பெரும் கருணை!

  • திருவரங்கத்திலே, தமிழ் ஓதும் தைத்திருநாள்!
  • பழனி மலையிலே, பாத யாத்திரையாய்க் குவியும் காவடிகள்!

    தைப்பூசம்-ன்னா என்ன? என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

  • முருகன் தோன்றிய நாள் = வைகாசியில் விசாகம்
  • அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
  • அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தையில் பூசம்
  • அசுரரை அழித்த நாள் = ஐப்பசியில் சஷ்டி
  • வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனியில் உத்திரம்

    கதையளவில் இப்படிச் சொல்லப்பட்டாலும்... புராணத்தை நாம் விட்டுத் தள்ளினாலும்.

    மனத்துக்கு இனிய இசை = காவடிச் சிந்தின் இசை! அந்த இசை துள்ளும் திருநாளே = தைப்பூசம்!

    சடங்கு சாத்திரம் அறியாத எளிய மக்கள். அவர்களுக்கும் முருகனுக்கும் உள்ள நேரடித் தொடர்பு = தைப்பூசம்! தைப்பூசம் -ன்னாலே, நம் மனசுக்குள் ஓடி வருவது = பழனிப் பாத யாத்திரையும், காவடி ஆட்டமும் தானே!

    ஒவ்வோர் ஆண்டும், தைப் பூசத்தில், பழனிப் பாத யாத்திரை. இது தெக்கத்தி மக்களுக்கே உண்டான வழக்கம். குறிப்பாக் காரைக்குடி/ தேவகோட்டை (எ) செட்டிநாட்டுப் பகுதி மக்கள்! 100 miles (160 km) நடந்து..., நம்பியை நம்பி வரும் உள்ளம். நடையாய் நடந்து வரும் உள்ளம்!

    பின்னாளில், இந்த எளிய பாத யாத்திரை, இதர ஆலயங்களுக்கும் பரவி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு எனக் கோலாகலமாய்ப் பரவி விட்டது!


    சரி... காவடிச் சிந்து -ன்னா என்னா-ன்னு பார்க்கும் முன்... "காவடி" -ன்னா என்னா -ன்னு பார்ப்போமா?:)

    அரும்பெறல் மரபின், பெரும்பெயர் முருக! அந்த மரபின் தனித்த அடையாளம் = காவடி!

  • மொட்டை போடுதல் திருப்பதியிலும் உண்டு. சமணக் குடும்பங்களில் கூட உண்டு.
  • அலகு குத்தல் அம்மன் கோயில்களில் உண்டு. வெறியாடலும் உண்டு!
  • ஆனா காவடி??? வேற எங்காச்சும் இருக்கா?

    நீங்களே யோசிச்சிப் பாருங்க! தமிழ்க் குடியின் தொன்மவியல். இந்த நாட்டார் வழக்கம் = முருகனோடு மட்டும் உறவாடுவது ஏனோ?

    இடும்பன் (எ) அசுரன், அகஸ்திய மகரிஷியின் இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான்.
    பாதி வழியில் கீழே வச்சிட்டுத் தூங்கும் போது...
    அது மேல மாம்பழக் கோவ முருகன் (எ) சுப்பிரமணியன், கோவமா ஏறி நின்னுக்கிட்டான்.

    தூங்கி எழுந்தவனோ, மறுபடியும் தூக்க முடியாமல், முருகனிடம் சண்டை போட, ஆளு "க்ளோஸ்".
    அப்போ, தன்னைப் போலவே, பக்தர்களும் காவடி தூக்கிட்டு வரணும்-ன்னு வேண்டிக்கிட்டான். டொட்ட டொய்ங்க்... End of Puranam:)

    இதனால் தான் முருகனுக்குக் காவடியா?

    எத்தனை சுலபமா, பூர்வகுடி மக்களின் வாழ்வியல் - தொன்மவியல் - முருகவியல் அடிபட்டுப் போயிருச்சே!:( "புராணம்" -ன்னு கதையைக் கட்டினா, தமிழ்த் தொன்மம் அழிஞ்சீரும்!

    போதாக் குறைக்கு, ஒளவை (எ) பெருமை மிக்க சங்கத் தமிழ்ப் பெண். ஆனா அவ மேலயும் "புராணக்" கதை! மொத்தம் 6 ஒளவையார்கள் தமிழ் இலக்கியத்தில்

    முதலாம் ஒளவை அதியமான் காலம் (3rd BCE - 2nd CE); அவ எப்படிக் கைலாசத்தில், "பழம் நீ அப்பா" பாட முடியும்? அப்படீன்னா, இயேசு பிறந்து, கிபி 2 க்குப் பிறகே சிறுபிள்ளை முருகன், பெரியவனா வளர்ந்து, சூரனை அழிச்சான் -ன்னு ஆயிருமே?:)

    புராணத்துக்கு அம்புட்டு Continuity போதாதுங்க:) தப்பில்லை! புராணம், புராணமா இருக்கட்டும் (Mythology)! ஆனா, அதை, வாழும் தமிழ்ச் சான்றோர் மேல், இட்டுக் கட்டக் கூடாது. நக்கீரர், ஒளவை போன்ற சங்கத் தமிழ்ப் பெருமக்களின் மாண்பு. அதை நாம் மதித்து நடக்கணும்! "மனசில்" கொள்வோம்

    அப்போ, "காவடி" -ன்னா என்னய்யா? அது எப்படி, தமிழ்த் தொன்மமான முருகனுக்கே உரியதாச்சு? பார்க்கலாமா?


    புறநானூறில் காவடி?

    தமிழ் அகராதியில் சும்மா போயி பொருள் பாருங்க. காவுதல் = தூக்குதல். காவு + தடி. காவு + அடி = காவடி!

    அதாச்சும், தூக்கும் தண்டு. காவும் தடி = காவடி! மலையில், பாரம் சுமக்க, பூர்வ குடி மக்களுக்கு இது ஓர் எளிய கருவி (Simple Machine)

    அறிவியலில் (Physics) படிச்சிருப்பீங்க, Fulcrum, Lever ன்னு எல்லாம் நெட்டுரு போட்ட ஞாபகம் இருக்கா?:) A lever is a beam connected to a hinge, called a fulcrum; அது Human Fulcrum ஆகும் போது, அதே Lever காவடி ஆகின்றது! இரு புறமும் நிறை (எடை) சமன் செய்தல் = Balancing!

    Mechanical Advantage of a lever (MA) = Balance of Torque, about the fulcrum; MA = m1/m2 = a2/a1 பயந்துறாதீக. ஒங்கள மறுபடியும் எட்டாம் வகுப்புக்குக் கூட்டிப் போவ மாட்டேன்:)

    இப்படி எடையைச் சமன் செய்யும், பூர்வ குடிகளின் கருவியே = காவடி!

    (குறிஞ்சி) மலை வாழ் மக்கள், கையால் சுமந்து செல்வது கடினம். அதான் எடையைப் பரவி, பின்பு சுமந்து செல்லுதல்! (மலைப் பிரதேசங்களில், ரெண்டு ஆட்களையே இப்படி உட்கார வச்சி, எளிதாகச் சுமந்து விடலாம், காவடியின் உதவியால்)

    சரி புரிஞ்சுது. ஆனா காவடி = ஏன் முருகனுக்கு மட்டுமே ஆனது?

  • ஏன்னா, முருகன்= குறிஞ்சிக் கடவுள் = மலையும் மலை சார்ந்த இடமும்!
  • திருமால்= முல்லைக் கடவுள் = காடும் காடு சார்ந்த இடமும்!

    மலை வெளியில், இம்புட்டு நீளமாத் தூக்கிச் செல்லலாம். காட்டிலே தூக்கினா, அந்த நீளத்துக்கு வழியெல்லாம் முட்டும்:) (#jokeonly : காதலன் முருகன் முட்ட மாட்டான். அப்பா திருமால் முட்டுவாரு:)

    மலைவெளிச் செங்குத்து. நடந்தாலே மூச்சு வாங்கும். அதில் பாரம் சுமக்க, இப்படியொரு எளிய வழி! அந்த மரபே, அந்தப் பூர்வகுடி மக்களின் கடவுளான, சேயோன் (எ) முருகனுக்கும் ஆனது. இன்னொரு பூர்வகுடித் தமிழ்க் கடவுளான மாயோன் (எ) திருமாலுக்கோ, கொற்றவைக்கோ, காவடி ஆகவில்லை! "மலைத்" தெய்வத்துக்கு மட்டுமே ஆனது!

    காவடியின் பல்வேறு பெயர்கள், தமிழ் இலக்கியத்தில்!

    • காமரம்,
    • காத் தண்டு, காவடித் தண்டு,
    • காவணப் பத்தி, காவுப் பொருட்டு

    புறநானூற்றிலும் காவடி வருகிறது. தூக்குறது யாரு? = ஒளவை-யாரு!:)


    அதியமானின் நாடு = தகடூர். மலை நாடு. அதனால், ஒளவையாரும் காவடி எடுக்கின்றார்!

    ஒளவையைத் தன் நாட்டிலேயே இன்னும் கொஞ்சம் நாள் வச்சிக்கடணும்-ன்னு அதியனுக்கு ஆசை. அதனால் அவருக்கு மட்டும் இன்னும் பரிசில் குடுக்கலை:)

    இது தெரியாமல், ஒளவைக்கோ கோவம். "போடா, உன் பரிசில் வேணாம். நான் கெளம்புறேன்" -ன்னு மூட்டை கட்டுறாரு, தன் Luggageஐ, ஒரு காவடியில்:)

    வாயி லோயே வாயி லோயே
    பரிசிலர்க்(கு) அடையா வாயி லோயே
    காவினெம் கலனே. சுருக்கினெம் கலப்பை
    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!
    (புறநானூறு 206; வாயில் நீட்டித்த அதியமான் நெடுமான் அஞ்சியை, ஒளவை பாடியது)

    • எத்திசை செலினும் அத்திசைச் சோறே = நான் எங்கிட்டு போனாலும் சாப்பாடு கெடைக்கும்டா. ஒன்னைய நம்பி இல்லை!
    • காவினம் கலனே = என் கலன்களை எல்லாம் காவுகிறேன் (தூக்குகிறேன்); காவு தடியில் (காவடியில்) இதோ தூக்குறேன். See u; Tata; Bye Bye:))

    என்ன வீறாப்பு பாருங்க செந்தமிழ்க் கிழவிக்கு:)

    • இன்னிக்கி "காவடி தூக்குறான்" -ன்னா பொருளே மாறிருச்சி:( டில்லிக்குக் காவடி எடுக்கும் அமைச்சர் -ன்னா, குனிந்து குனிந்து கெஞ்சுதல்!
    • ஆனா, அன்னிக்கி பாருங்க... "காவடி எடுக்கறேன்" -ன்னா, கெளம்புறேன், ஒன்னை நம்பி இல்ல -என்னும் தமிழ் மான உணர்ச்சி!

    ஒளவை மட்டுமா காவடி எடுக்குறா? பின்னாளில், கம்பனும் காவடி எடுக்குறான்!

    அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
    பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
    திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடு
    எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே
    (பால காண்டம் - எழுச்சிப் படலம் 768; தயரதன், திருமணத்துக்கு வரும் வழியில் கண்ட, மலைக் காட்சிகள்)

    பரித்த காவினர் = காவடித் தண்டைச் சுமந்து சென்றார்கள். யார்? = பப்பரர் என்னும் மலைவாழ் மக்கள். அரத்த நோக்கினர் = சிவந்த கண்கள். அல் திரள் மேனியர் = கருத்த உடம்பு. காவடியில் பாரம் தூக்கிக்கிட்டு மலையேறுகின்றனர்.

    இது தாங்க, புராணம் கலவாத, தமிழ்க் காவடியின் கதை!:) வாங்க, நாம காவடிச் சிந்துக்குப் போவோம்! அங்கே தானே மனசுக்குப் பிடிச்ச இசை இருக்கு?:)


    மொத்தம் எத்தனை விதமான காவடிகள்?

    "பால் மணக்குது, பழம் மணக்குது" -என்னும் பாட்டில், ரமணி அம்மாள், பல காவடிகளின் பேரைப் பட்டியல் போடுவாங்க. செம குத்துப் பாட்டு:)

    பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்! சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்! சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!

    இது இல்லாம... பூங் காவடி, காசுக் காவடி, அன்னக் காவடி, விபூதிக் காவடி -ன்னு எதையும் சுமந்து செல்வார்கள், அவரவர் மனசு வேண்டுதலின் படி!

    இப்பல்லாம் பறவைக் காவடி-ன்னு ஒன்னு பிரபலம் ஆயிருச்சி, குறிப்பா மலேசிய - சிங்கையில். அதாச்சும் தான் எதுவும் சுமக்காமல், ஒடம்பு முழுக்க குத்திக் கொண்டு, அவரை Crane (அ) Machine சுமக்கும். பறவை போல் இவர் ஊசலாடுவதால், பறவைக் காவடி!

    இப்படியான "அதீத உடல் வருத்திக் கொள்ளல்" பற்றி இப்போ நான் ஒன்னும் சொல்லலை. ஆனா இதிலிருந்து சிறுவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து விடுங்கள், Please...

    முருகனை, மனசால் எண்ணியெண்ணிச் "சுமக்கும்" இன்பத்தை விட, பேரின்பம் வேறு இல்லை! எனவே, வேண்டுதலுக்கு, நாம் மனசால் "சுமந்து" செல்லுதலே நலம். மெஷின் நம்மைச் சுமத்தல் அத்தனை நலம் அன்று. (என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. மன்னிக்க)

    காவடியாட்டம் இரண்டு வகை: 1) பக்திக் காவடி 2) ஆட்டக் காவடி

    பக்திக் காவடி பற்றி, மேலே பேசினோம். ஆட்டக் காவடி அப்படியல்ல! அது நாட்டுப்புறக் கலை! தண்டிலே, அலங்கார மூங்கில் கூடு, மயில் இறகுகள் சொருகி, விதம் விதமாய் ஆடும் ஆட்டம்!

    • தலை, நெற்றி, தோள்
    • முதுகு, கழுத்து, வயிறு = இப்படிப் பல உறுப்பிலும் வச்சி, முன்னும் பின்னும் ஆட்டும் கலை!

    நாதசுரம்-தவில் மட்டுமேயான இசை! Rocks n Ragas!:) சில சமயம், பம்பை, கிடுகிட்டி, தமுக்கும் அடிப்பாங்க. ஆனா மெட்டு எப்பமே அந்தப் புகழ் பெற்ற மெட்டு தான் = காவடிச் சிந்து;

    தோளில் தான் காவடியை நிறுத்துவாங்க. அடவு செஞ்சிக்கிட்டே, காவடியைத் தலைக்குக் கொண்டு வந்து, சும்மா சுழற்று சுழற்று -ன்னு சுழற்றுவாங்க. கையால் பிடிக்காமயே இத்தினி சுத்து சுத்தினாலும், அது கீழே விழாது!

    என்னால இப்பிடியெல்லாம் ஆட முடியாது:) கிராமத்துக் காவடிப் பூசை கட்டும் போது, ஆயா (பாட்டி) சிந்து பாடி, ஊருக்கே எடுத்துக் குடுப்பாங்க. ஒவ்வொருத்தராச் சுமந்து நடந்து போறதோட சரி. ரொம்ப நாள் ஆயிருச்சி.

    தோழனோடு ஒரு முறை போகும் போது, முருகனுக்குக் காவடி எடுக்கணும் -ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை!


    நாட்டுப்புற மக்கள், கந்தனைக், காலாறக், காவடி எடுத்து வழிபடும் வழக்கம் பற்றி...

    • பின் வந்த சிற்றிலக்கியங்களில் காணவே இல்லை!
    • சந்தம் செய்யவே பிறந்த நம் சொந்தக் கவியான அருணகிரியும், ஏனோ காவடி பற்றி ஒன்னுமே பாடவில்லை.

    பிற்கால இலக்கியங்களில் இல்லாவிட்டால் என்ன? இல்லையென்று ஆகி விடுமா? 19th CE-இல் புண்ணியம் கட்டிக் கொண்டார் ஒரு தெலுங்கர் - தமிழ்க் கடவுளை! அவர் தான் அண்ணாமலை ரெட்டியார்.

    காவடிச் சிந்தை அதிகமாகப் பாடிப், பிரபலம் ஆக்கினார். ஆனா, காவடிச் சிந்து பிறந்ததே, 19th CE-இல் தான்-ன்னு அவசரப்பட்டு முடிவு கட்டீறக் கூடாது. அதற்கும் முன்பே எளிய மக்கள் - நாட்டார் வழக்கில் இருந்தது தான். ஆனா இலக்கிய எல்லைக்குள் வரலை.

    திருமங்கை என்ற முன்னாள் கள்வன்-பின்னாள் ஆழ்வார் (7th-9th CE), இதை இலக்கியத்துக்குள் கொண்டு வந்து கொடுத்தார். நந்திபுர விண்ணகரம் என்னும் ஊருக்குப் போவும் போது, வழியில் அலுப்பு தட்டாம இருக்க, எசப்பாட்டாய், பெருமாள் மேல் பாடிய சிந்துப் பாடல்கள்!

    = இதுக்குப் பேரு வழிநடைச் சிந்து! = இதையே, காவடி தூக்கிக்கிட்டு, வழியில் பாடினால், காவடிச் சிந்து

    "சிந்து" என்றால் 3 x 3 சீராய், அடிகள். = குறளடி, சிந்தடி, அளவடி, நெடில் அடி, கழி நெடில் அடி = இவை தமிழிசைக் கூறுகள் / யாப்பு இலக்கணமும் கூட.

    முருகன் அருளினை ஆக்கி (3)- வலைப்
    பூவினில் காவடி தூக்கி (3) - நல்ல
    அடியார் மனம் மகிழ்வாகிட (3),
    ஆசைத் தமிழ்ப் பதிவாகிட (3)
    வாராய் அருள் தாராய்! (3)

  • இப்படி மூனு மூனு சீராய்ப் பாடுவது = சிந்து.
  • காவடி இசைக்குன்னே பாடினால் = காவடிச் சிந்து.

    வழியில், பாரம் தூக்கிக்கிட்டுப் போவும் போது, பாமரர் பாடும் வழிநடைப் பாடல்கள்! பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) -ன்னுல்லாம் "சாஸ்த்ரீயமா" இருக்காது. நேரடியாச் சரணம். முருகனே சரணம்:)

    இதை, இன்று கர்நாடக இசையில், சிலர் இழுத்து இழுத்துப் பாடுறாங்க. ஆனால், காவடிச் சிந்தின் அடிநாதமே அந்த வேகம் தான். சும்மாக் குத்துப் பாட்டு கணக்கா, காலு தானாவே ஆடணும்!:)

    கழுகுமலைக் கோயிலின் முன்பு...

    சென்னிக் குளநகர் வாசன் - புகழ்
    தேறும் அண்ணாமலைத் தாசன் - செப்பும்
    செகம் மெச்சிய மதுரக்கவி
    அதனைப்புது வரையில் புனை
    தீரன் அயில் வீரன்!

    அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
    அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
    அடியார்கணம் மொழி போதினில்
    அமராவதி இமையோர் செவி
    அடைக்கும் அண்டம் உடைக்கும்!

    "உடைக்கும்" -ன்னு உடைக்குறா மாதிரிப் பாடணும். இழுக்கக் கூடாது:) அண்ணாமலை ரெட்டியார், அப்படித் தான் பாட்டின் மெட்டுக்களை அமைச்சாரு! கழுகுமலை முருகன் மீதும், சென்னிக்குள முருகன் மீதும், அவரு போட்டுள்ள பாடல்கள், சும்மா "கும்"-ன்னு இருக்கும்!

    பின்னால் வந்த தமிழ்-தேசியக் கவி, பாரதியும், இந்த மெட்டில் சில கண்ணிகளைச் செஞ்சிருக்கான். ரெட்டியார்-பாரதியார் எல்லாரும் ஒரே ஊர்க்காரவங்க தானே?:)

    பச்சைத் திருமயில் வீரன்
    அலங் காரன் கெளமாரன்
    பணிசுப்பிர, மணியற் கருள்
    அணிமிக் குயர், தமிழைத் தரு
    பக்தர்க் கெளிய சிங்காரன் -
    பச்சைத் திருமயில் வீரன்!


    தூக்கு மேடையில் ஒரு காவடிச் சிந்து:

    "ஆர்மோனியம்" காதர் பாட்சா என்ற ஓர் இசைக் கலைஞர். இசுலாமியர் தான். ஆனாலும், கழுகுமலை முருகன் மீது ரொம்ப ஈடுபாடு. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாடல்களில் ஈர்ப்பு. காதர் பாட்சா = காவடிச் சிந்து பாட்சா ஆகிவிட்டார்:)

    ஆனா, ஏதோவொரு வழக்கில் பாவம் சிக்கிக்கிட்டாரு. அப்பாவிக்குத் தூக்குத் தண்டனை. "உன் கடைசி விருப்பம் என்ன?" - தூக்கு மேடையில் அதிகாரி கேட்ட போது, "காவடிச் சிந்தை என் ஆர்மோனியத்தில் கொஞ்ச நேரம் ஆசை தீரப் பாடணும்" என்றார் பாட்சா.

    சுருளிமலை மீதில் மேவும்சீலா - உனைத்
    தோத்தரித்தேன் சுப்ர மண்யவேலா - பசுந்
    தோகைமயில் - மீதில் ஏறி
    வாகுடனே - காத்(து) அருளும்
    துய்யா முரு கைய்யா!

    பலரும் கேட்டார்கள், மனம் மயக்கும் தமிழிசையை. ஒரு வாத்தியமும் இல்லாமல், தானாவே இசை கூட்டும் சந்தம்! நேரம் கடந்து போனதே தெரியாமல், அதிகாரிகள் ரசித்துக் கொண்டிருக்க.. முடிவில் தூக்கு மேடை ஏறினார் காதர் பாட்சா!

    ஆனால், உடன் இருந்த வழக்கறிஞர், ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பினார். "மாலை சரியாக 6:00 மணிக்குக், காதர் பாட்சாவை, உயிர் பிரியும் வரை, தூக்கில் தொங்க விடுங்கள்" - இதுவே நீதிபதியின் தீர்ப்பு.

    ஆனால் காலம் கடந்து விட்டது. 6:45; "தண்டனை உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால், ஒன்று ரத்து செய்ய வேண்டும், இல்லை அப்பீல் செய்ய வேண்டும்" - விதிகளைச் சுட்டிக் காட்ட... அன்று தலை தப்பிய பாட்சா, பின்பு நீதிமன்றத்திலும் தலை தப்பினார்!

    என் "தலை" வைத்து, உன் இணையடி காக்க! என் உயிருக்கு உயிராம், இறைவன் காக்க!


    தைப்பூச நாயகனின் காவடிப் பதிவு இதுவே.

    காவும் (தூக்கும்) தடி = காவு + தடி = காவடி!

  • சங்கத் தமிழ் மரபு = காவடி!
  • பூர்வ குடிகளின் தமிழ்த் தொன்மம் = காவடி!

    அந்தக் காவடிக்கு நாயகனே! என் காதலுக்கும் நாயகனே! பெரு காதல் உற்ற, தமியேனை நித்தம் பிரியாது பட்சம் மறவாதே! "முருகா" - குறை தீர வந்து குறுகாயோ?